Thursday, September 17

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு





பிறப்பு: ஜனவரி 23, 1897

இடம்:  கட்டாக்ஒரிசா மாநிலம்இந்தியா

பணிஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்இந்திய தேசிய ராணுவத்தை  உருவாக்கியவர்.


பிறப்பு  மற்றும் ஆரம்ப வாழ்க்கை

     ‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

     இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும்பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள “பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்” தொடங்கினார். பின்னர், 1913ல் “கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்” தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார்.

    1915ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்த அவர், “சி.எஃப் ஓட்டன்” என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், “ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார்.

     1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ஜெனரல் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.

திருமண வாழ்க்கை

பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942ஆம் ஆண்டு வியன்னாவில்,  அனிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.

சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு

‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது’ எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார்.

        1922ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.         

          சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்டு  சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் மோதிலால் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சியை” தொடங்கியது மட்டுமல்லாமல்,  “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார்.

       1928ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை,  ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போசின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து, காங்கிரசில் இருந்தபடி, 'விடுதலைச் சங்கம்' என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால், காங்கிரசு காரியக் குழுவில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், "காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை" எனக் கட்சியிலிருந்து விலகி, சீனிவாச ஐயரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் சனநாயக கட்சி'யைத் தொடங்கினார். 

     1938ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள்,  நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை” என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார்.

      1939ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார். ‘பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்’ என கூறி 1940ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது.    

         ‘இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று தொடர்வண்டி மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து செருமனியத் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார் அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.

சுதந்திர இந்திய ராணுவம்

1941ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார்.

      1943ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு  “நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை”  “ஜெய் ஹிந்த்”  என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.

போஸ் மரணம் குறித்த சர்ச்சை

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. ஆனால் தைவான் நாடு, அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.   “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர், அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும், சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர். 

    இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்), இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். இதன்படி 1970ம் ஆண்டு ஜுலை மாதம், முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது, ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் நிப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார். 1999ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006ம் ஆண்டு மே 17ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.

நேதாஜியின் சிறப்புகள் 

எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக  போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.

சுபாஷ் பெற்ற பட்டங்கள் :

அசாத் இந்து தலைவர்

இந்தியத் தேசிய இராணுவத்தின் சம்பிரதாயத் தலைவர்

நேதாஜி

1991இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான, "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது.

Note: 1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான, "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால், சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.

சுபாஷ் தொடங்கிய கட்சி 

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (All India Forward Bloc) இந்திய நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி 1939ஆம் ஆண்டு நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போசால் துவக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. ஆங்கிலேய அரசால் 1942இல் தடை செய்யப்பட்டது. 1939இல் பார்வார்டு பிளாக் என்ற பெயரில் பத்திரிக்கை வெளிவந்தது. 1963 வரை அதன் தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருந்தார். இக்கட்சியின்  தற்போதைய பொதுச் செயலாளர் தேபப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது.
  • ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த `இந்திய சுதந்திர அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!
  • `இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!’ இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944ல் `ஆசாத் ஹிந்த்’ வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா’ என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் `சுதந்திர இந்தியா’ என்று பொருள்!
  • காந்திக்கும் போஸீக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை `தேசப்பிதா’ என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை `தேச பக்தர்களின் பக்தர்’ என்று அழைத்தார்!
  • சிங்கப்பூரில் 1942ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
  • தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக `ஜெய் ஹிந்த்’.... அதாவது, `வெல்க பாரதம்’ என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி, அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!
  • பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், `இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!’
  • ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். `அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி!
  • பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!
  • 1943ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர் கர்னல் லோகநாதன்!
  • டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார். உடனே நேதாஜி, ``சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்’’ என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!
  • 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!
  • `ஒரு இந்தியனின் புனித யாத்திரை’ இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார்.
    • `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!.

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...