Thursday, March 18

வகைப்பாட்டியல் TNPSC Notes


கரோலஸ் லின்னேயஸ் (Carl Linnaeus or Carolus Linnaeus) (மே 23, 1707 - ஜனவரி 10, 1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறைக்கும், பெயர்முறைக்கும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (ecology) முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தையென அழைக்கப்படுகிறார்.

வகைப்பாட்டியல்

லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன:

திணை(இராச்சியம்) (kingdom)
வகுப்பு (class)
வரிசை (order)
பேரினம் (genus)
இனம் (species)

இவர் உயிரினங்களை பிளாண்டே (plantae - தாவரங்கள்), அனிமேலியா (animalia - விலங்குகள்) என இரு திணைகளாகப் பகுத்தார். இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில், ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்குப் பல சொற்பெயரிடு முறை என்று பெயர். பலசொற்களால் பெயரிடும் முறையின் சிக்கல்களைத் தவிர்க்க, 1623ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் (Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர்,  இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார். இம்முறையை பின்பற்றி, சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரும், மருத்துவருமான கரோலஸ் லின்னேயஸ் (1707–1778) பெயரிடல் முறையைப் பெரிதும் ஒழுங்கு படுத்தினார். அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் ("Species Plantarum", 1753 ) ஒன்றை இயற்றினார். இவர் உருவாக்கிய இருசொல் பெயரிடும் முறையானது எளிய முறையில் அமைந்திருந்தது. இம்முறையே நடப்பில் வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காரணங்களால், கரோலஸ் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.


உயிரினங்களின் வகைப்பாடு


இனங்களின் வகைப்பாடு முதல் இரண்டு தொகுதி, 1753ல் வெளியிடப்பட்டபின் அது முக்கியத்துவம் வாய்ந்த பெயரிடும் முறையின் தொடக்க புள்ளியாக உள்ளது.

இன வகைப்பாடு

இன வகைப்பாடு, 1737இல் வெளியிடப்பட்டது. இதன் 10 பதிப்புகளில் லின்னேயஸ் அவர்களால் 1754ல் வெளியிடப்பட்ட ஐந்தாவது பதிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. இதில் 24 வகைகளாகத் தாவர உலகம் பிரிக்கப்பட்டுள்ளது, தாவரங்களின் மறைக்கப்பட்ட இனப்பெருக்க பாகங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.

தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு(Philosophia Botanica)

தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு 1751ல் வெளியிடப்பட்டது. தாவர வகைப்பாடு மற்றும் பெயரிடும் முறைபற்றிய லின்னேயஸின் சிந்தனை சுருக்கத்தை, அவர் முன்பு 1736ல் தாவரங்களின் அடிப்படை வகைப்பாடு (Fundamenta Botanica) மற்றும் 1737ல் தாவரங்களின் தீவிர வகைப்பாடு (Critica Botanica) என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளில் கரோலஸ் லின்னேயஸ் பயணம் மேற்கொண்டு, நிறைய மாதிரிகளைச் சேகரித்ததுடன் அங்குள்ள அறிவியல் அறிஞர்கள் பலரை சந்தித்தார். பின்னர், சுவீடன் திரும்பி, ஸ்டாக்ஹோமில் மருத்துவராகப் பணியாற்றினார். ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.  உப்சாலா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக 1741இல் பொறுப்பேற்று, பின் 1750இல் அப்பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இருசொல் பெயரிடுவதன் இன்றியமையாமை

உயிரினங்களின் பெயர்களைப் பொதுப்பெயரிட்டு அழைத்து அறியப்படும் நடைமுறையானது வழக்கத்தில் இருந்து வந்தது. இந்தப் பொதுப்பெயர்கள் இட்டு வழங்கும் முறைகளால் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறான குழப்பங்கள் நீடித்து வந்தன. இந்நடைமுறை உலகத்தார் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாததாகக் காணப்பட்டது. இத்தகைய குறைபாடுகளைக் களைவதற்காக உயிரினங்களுக்கு அறிவியல் முறைப்படி பெயரிடும் முறை உருவானது. இது உலகளவிலும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கரோலஸ் லின்னேயஸ் உயிரினங்களுக்கு தற்போதும் நடைமுறையிலுள்ள இருசொற் பெயரீட்டு முறையை உருவாக்கினார். கரோலஸ் லின்னேயசின் இத்தகைய வகைப்பாட்டியல் முறை, உயிரினங்களுக்குப் பெயரிடவும், அவற்றை வகைப்படுத்திடவும், ஒப்பீடுகள் மேற்கொண்டு வேறுபாடுகளை அறிந்திடவும் பயன்படுகிறது.

இருசொல் பெயரிடும் முறையின் அடிப்படை விதிகள்

  1. உயிரினங்களின் அறிவியல் பெயர் இலத்தின் மொழி அல்லது இலத்தின் மொழி மொழிபெயர்ப்பு ஆகியவற்றால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  2. பேரினப் பெயரில் இடம்பெற்றிருக்கும் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தில் எழுதப்படுதல் இன்றியமையாதது.
  3. சிற்றினப் பெயரின் முதல் எழுத்தைச் சிறிய எழுத்தில் எழுதப்படுதல் அவசியம்.
  4. ஓர் உயிரினத்தின் இருசொற் பெயர்களைப் பதிவிடும்போது சாய்வான எழுத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
  5. இப்பெயர்களைக் கையினால் எழுதும்போது அப்பெயர்களுக்கு அடியில் அடிக்கோடிட்டு எழுதப்பட வேண்டும்.

சில இருசொல் பெயர்கள்

தாவரவியல் பெயர்கள்

அரிசி - ஒரைசா சட்டைவா
உருளைக்கிழங்கு - சொலானம் டியுபரோசம்
மா - மாஞ்சிபெரா இண்டிகா
செம்பருத்தி - ஹைபிஸ்கஸ் ரோசாசைனேன்சிஸ்
தக்காளி - லைகொபெர்சிகான் எஸ்குலன்டம்

விலங்கியல் பெயர்கள்

புறா - கொலம்பா லிவியா
தவளை - ரானா ஹெக்ஸ்காடாக்டைலா
மனிதன் - ஹோமோ செப்பியன்ஸ்
வீட்டு ஈ - மஸ்கா டோமஸ்டிகா
பாம்பு - நாஜா நாஜா

இருசொல் பெயரிடும் முறையின் படிநிலைகள்

உயிரின வகைப்பாட்டியலின் மிகப்பெரிய படிநிலை உலகம் ஆகும். இதன் கீழ் பல்வகைப்பட்ட துணை அலகுகள் பல்வேறு படிநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகைப்பாட்டியலின் பல்வேறு படிநிலைகள் உலகம், தொகுதி, வகுப்பு, துறை, குடும்பம், பேரினம், சிற்றினம் என்பதாகும். இந்த பூமியின் மேற்பரப்பில் வாழும் அனைத்துவித உயிரினங்களும் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் படிநிலைகளின்படி இறங்கு வரிசை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவான பண்புகளின் அடிப்படையில் உயிரினங்கள் பல்வேறு சிறு அலகுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகிலும் உள்ள உயிரினங்கள் அவற்றிற்கு முந்தைய அலகு உயிரிங்களிளிருந்து உருவாகியிருக்கக் கூடும். இவ் வகைப்பாட்டியலின் கீழ்நிலை அலகு சிற்றினம் ஆகும்.


ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...